புதுடெல்லி: சீனாவுக்கு ஆதரவான செய்தி வெளியிட நிதி பெற்றதாக நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனம் மற்றும் அதன் பத்திரிகையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த அக்டோபர் 3ம் தேதி டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இணையதள நிறுவனரும், ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா, எச்ஆர் தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எச்ஆர் தலைவர் சக்கரவர்த்தி இவ்வழக்கில் அப்ரூரவராக மாற இருப்பதாகவும், உரிய தகவல்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய இந்த வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சக்கரவர்த்தியின் வாக்குமூலத்தை பொறுத்து அவருக்கு ஒத்துழைப்பு தருவது குறித்து முடிவெடுக்கப்படும் என டெல்லி சிறப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.