மக்களவை தேர்தலில் வென்று 3ம் முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள மோடிக்க தைவான் அதிபர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “வளர்ந்து வரும் தைவான் – இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், பிற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தவும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்தவும் இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தன் ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்த மோடி, “பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார, தொழில்நுட்ப உறவுகளை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவே நிங் கூறியதாவது, “சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை வைத்துள்ள நாடுகள் தைவான் அதிகாரிகளுடன் எந்த வகையில் உரையாடுவதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவிக்கும். தைவானின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருப்பதுடன், ஒரே சீனா கொள்கைக்கு எதிரான செயல்களில் இருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.