பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாஜ் மாயா தகுதி பெற்றார். 2வது சுற்றில் உள்ளூர் நட்சத்திரம் சிஜியா வெய் (20 வயது, 140வது ரேங்க்) உடன் நேற்று மோதிய பீட்ரிஸ் மாயா (28 வயது, 12வது ரேங்க்) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 56 நிமிடத்துக்கு நீடித்தது.
மற்றொரு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்), தாய்லாந்து வீராங்கனை மனன்சயா ஸ்வாங்கவா (22 வயது, 187வது ரேங்க்) மோதினர். சபலென்கா நேரடியாக 2வது சுற்றில் களமிறங்கினார். முதல் சுற்றில் ஜரினாவை (கஜகிஸ்தான்) வீழ்த்தி இருந்த மனன்சயா, முதல் செட்டில் கொஞ்சம் போராடினாலும் 2வது செட்டில் எதிர்ப்பின்றி சரணடைய… சபலென்கா 6-4, 6-1 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
செக் குடியரசின் கரோலினா முச்சோவா (28 வயது, 49வது ரேங்க்) தனது 2வது சுற்றில் 6-3, 6-1 என நேர் செட்களில் சீனாவின் யுயே யுவானை (26 வயது, 41வது ரேங்க்) எளிதாக வீழ்த்தினார். அதே சமயம், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா (28 வயது, 10வது ரேங்க்) 2 மணி 51 நிமிடங்கள் கடுமையாகப் போராடி 6-1, 4-6, 5-7 என்ற செட்களில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனிடம் (26வயது, 80வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஆஷ்லின் குரூகர், அனிசிமோவா, ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.