கொடைக்கானல் : சாரல் மழையுடன் கிளைமேட் ஜில்லென்று இருப்பதால் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. தற்போது இரண்டாவது சீசன் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வார விடுமுறையான நேற்று மற்றும் நேற்று முன் தினமும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
தொடர்ந்து ஒரு வாரமாக கொடைக்கானலில் மழை பெய்து வருவதால் அங்கிருக்கும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை கொடைக்கானலை ஜில்லென்று வைத்துள்ளது. இந்த சீதோஷண நிலையை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களான மோயர் பாய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட் நட்சத்திர ஏரி ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது.