குழந்தை திருமணம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை

சென்னை: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளிட்டுள்ள அறிவிப்பு: 18 வயது நிறைவடையாத பெண்கள், குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்துவது குழந்தைகள் திருமண தடைச்சட்டம்படி பெருங்குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண்குழந்தையை திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். 18 வயது நிரம்பாத பெண்குழந்தையை பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டால் அந்நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 18 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து, அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்றபெண்குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டு நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது களப்பணியாளர்கள் சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்புபிரிவு, காவல் ஆய்வாளர் ஆகியோரால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.

திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தியில் ஒப்படைக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்பட்டால், காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்