குழந்தை பருவ நோய்த்தடுப்பில் உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக குழந்தை பருவ நோய்த்தடுப்பு என்பது சுமார் 95 முதல் 99 சதவீதம் வரை எட்டியுள்ளது. இப்போது, ​​மாவட்ட சுகாதார பிரிவு மட்டத்தில் உள்ள சவால்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

உலகளாவிய நோய்த்தடுப்பில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு, நாம் சிலவற்றை இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, மாவட்ட சுகாதார நிலையில் குழந்தை பருவ நோய்த்தடுப்புகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிய உதவும் முக்கிய குறியீடுகள் எங்களிடம் உள்ளன. பிறக்கும்போதே போடப்படும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, 12 மாதத்திற்குள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளுடனும், 10 வயதில் டெட்டனஸ்-டிப்தீரியா தடுப்பூசிகளுடனும் முழுமையாக தடுப்பூசி போடுவதை நாங்கள் பார்த்து வருகிறோம்.

மாவட்ட சுகாதார பிரிவுகளில் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்படுவதை பகுப்பாய்வு செய்யும் தர நிர்ணய முறையை இயக்குனரகம் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி 95 சதவீதத்திற்கும் அதிகமாக செலுத்தி இருந்தால், நாங்கள் 10 மதிப்பெண் வழங்குகிறோம். 90 முதல் 95 சதவீதமாக இருந்தால் ஐந்தாகவும், 90 சதவீதத்திற்கும் குறைவானால் பூஜ்ஜியமாகவும் குறிக்கப்படுகிறது. முழு நோய்த்தடுப்புப் பெற்றவர்களுக்கு 100 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் 10 ஆகவும், 90 முதல் 99சதவீதம் வரை 5 ஆகவும், 90 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் 0 மதிப்பெண் தருகிறோம்.

இந்த தரவுகள் இயக்குநரகத்தில் சேமிக்கப்பட்டு இந்த குறியீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட சுகாதார பிரிவும் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம், எந்த குறிப்பிட்ட மாவட்டம் பின்தங்கியுள்ளது, விடுபட்ட காரணிகள் என்ன என்பதை நாங்கள் கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் இடைநிறுத்தப்பட்ட குழந்தைகள், அதாவது டோஸ் தவறவிட்ட குழந்தைகளையும் நாங்கள் கவனித்து வருகிறோம். இதில், பென்டாவலன்ட் 1 மற்றும் பென்டாவலன்ட் 3 தடுப்பூசி, பென்டாவலன்ட் 3 மற்றும் தட்டம்மை-ரூபெல்லா எம்ஆர் 1 தடுப்பூசி, எம்ஆர் 1 மற்றும் எம்ஆர் 2 தடுப்பூசி போன்ற ஒரு தடுப்பூசிக்கும், அடுத்த தடுப்பூசிக்கும் இடையே விடுபட்ட டோஸ்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!