திருப்புவனம்: குழந்தையுடன் மனைவி மாயமானதால் மாமியாரையும், அவரது தாயான மூதாட்டியையும் மருமகன் வெட்டி கொலை செய்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பசுபதி (39). இவரது மனைவி சோனியாகாந்தி (35). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். பசுபதி குடித்து விட்டு வீட்டில் மனைவி, குழந்தைகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சோனியாகாந்தி அருகில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விடுவதும் பிறகு சமாதானம் செய்து பசுபதி அழைத்து செல்வதும் அடிக்கடி நடந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன் சோனியாகாந்தி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை அழைத்து கொண்டு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மாமியார் பாண்டிலட்சுமி (53) உடந்தையாக இருந்ததாக கூறி, பசுபதி ஆத்திரத்தில் இருந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு பசுபதி, மாமியார் பாண்டிலட்சுமி வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அரிவாளால் பாண்டிலட்சுமி மற்றும் தடுக்க முயன்ற பாண்டிலட்சுமியின் தாய் சொர்ணவள்ளி (80) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து பசுபதியை தேடி வருகின்றனர்.