இன்றைய காலசூழலில், ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் தனது குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதே. அதற்காக சிலர் பலவழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், பொதுவாக ஒரு குழந்தை சாதனையாளராக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது. புத்திக்கூர்மைக்கு, கவனிப்பு திறனும், சிறப்பான நினைவாற்றலும் தேவை. நம் குழந்தைகளிடம் இவை இரண்டையும் மேம்படுத்திவிட்டால், அவர்கள் இயல்பானவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட்டானவர்களாக மாறிவிடுவார்கள். எனவே, சிறுசிறு பயிற்சி மற்றும் முயற்சிகளினால் குழந்தைகளின் நினைவாற்றலையும், கவனிப்பு திறனையும் மேம்படுத்த முடியும்.
அந்தவகையில், ஒரு குழந்தைக்கு ஐந்து வயது தொடங்கியது முதல் அதன் பதினைந்து வயது வரை தொடர்ச்சியாக ஒருசில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய நினைவாற்றல் மற்றும் கவனிப்பு திறன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்த பயிற்சிகளினால், நினைவாற்றல் அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் கவனமும் எந்த பக்கமும் சிதறாமல், ஒரே இலக்கில் நிலைநிறுத்தப்பட்டு, கற்றலும்-புரிதலும் அதிகரிக்கிறது.
உதாரணமாக, இன்றைய சூழலில் கல்வி கற்பது, தேர்வுகளை எதிர்கொள்வது, பாட்டு, டான்ஸ் போன்ற கூடுதல் பயிற்சி வகுப்புகள் என ஸ்ட்ரெஸ் மனநிலையில் குழந்தைகள் இருக்கின்றனர். அதிலிருந்து விடுபட்டு மனதை லேசாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள ஒரு சில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது மன அழுத்தம் குறைகிறது. அவை என்னவென்று பார்ப்போம்.
எழுத்து பயிற்சிகள், ரூபிக் கியூப் விளையாட்டுகள், சிந்திக்க தூண்டும் கேள்வி பதில்கள், புதிர் விளையாட்டுகள், தினசரி உடற்பயிற்சி, யோகா-தியானம் போன்ற பயிற்சிகளை தினசரி மேற்கொள்ளும்போது, நினைவாற்றலை தூண்டவும், கவனிப்பு திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கவும், எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது.
மேலும், சமூக உறவிலும், குடும்ப உறவிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளரவும் உதவுகிறது. இதன்மூலம், பிரச்னைகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் ஆற்றல் உடையவர்களாக வளருவார்கள். எனவே, இன்றைய இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற பயிற்சிகள் மிக மிக அவசியமாகிறது. இதனை முறையாக கடைபிடித்தால், இன்றைய குழந்தைகள் நாளைய சாதனையாளர்களாகவும் மாறலாம்.