சென்னை: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இன்று முதல் அக்.24ம் தேதி வரை சென்னை உட்பட 4 நகரங்களில் நடைபெற உள்ளது. மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் சுமார் 11.56லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு பங்கேற்றவர்களை விட சுமார் 3 மடங்கு அதிகம். இதில் வெற்றிப் பெற்ற 33ஆயிரம் பேர் மாநில அளவிலான போட்டிகளில் மாவட்ட வாரியாக பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு 27ஆயிரம் பேர் மாநில அளவிலான போட்டியில் கலந்துக் கொண்டனர். பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5பிரிவுகளில் 35வகையான வி ளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த முறை கைப்பந்து, டிராக் சைக்களிங், ஜிமனாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், கோகோ, குத்துச்சண்டை, கேரம், வாள் வீச்சு, சதுரஙகம் என 11வகையான விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. போட்டிகள் சென்னையில் மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெறும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கான தங்குமிடம், வாகன வசதி ஆகியவற்றை விளையாட்டுத் துறை அமைச்சகமே செய்துள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு 25ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ரொக்கப்பரிசும் வழங்கப்படும். அரசு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.