தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய முதலமைச்சர்; தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை அரசு கைப்பற்றியுள்ளதாக பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோயில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்று தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? எதைத் தவறு என்கிறார் பிரதமர்? பிரதமர் பார்வையில் தான் தவறு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா? வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா? 2 ஆண்டுகளில் ரூ.3.50 கோடி மதிப்பிலான கோயில்கள் மீட்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசம், அந்தமான், தெலங்கானா என எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார். பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பேசுவது முறையா? தர்மமா? பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியை சொல்வது சரியா?” என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related posts

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 886 புள்ளிகள் சரிவு..!!

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: உதவி எண் அறிவிப்பு

திருப்பாலைவனம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் ஆய்வு: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு