திமுகவின் 75ம் ஆண்டு பவளவிழாவை கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில், திமுகவை 6வது முறையாக ஆட்சியில் அமரவைத்துஇந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயரிலான பெருமைமிகு விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான “மு.க.ஸ்டாலின் விருது” தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார். மேலும் விழாவில் திமுக விருதுக்காக தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம், நகரம் பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று, பணமுடிப்பு வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திமுக முப்பெரும் விழாவிற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளதால் விழாவிற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அனைவரும் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன. மேலும் உணவு, குடிநீர் வசதியும் செய்யப்படுகிறது. விழாவை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் மெகா டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட உள்ளன.