திருமலை: லண்டன் பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் ஆந்திராவுக்கு திரும்பினார். தொடர்ந்து முகாம் அலுவலகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக நடந்தது. இதையடுத்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் தனது குடும்பத்துடன் 15 நாட்கள் சுற்றுபயணத்திற்கு செல்ல கடந்த மாதம் 17ம் தேதி அன்று சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்பட்டார். பின்னர் லண்டனில் இருந்து தனது மகள்களுடன் சுவிட்சர்லாந்து சென்றார்.
15 நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு லண்டனில் இருந்து புறப்பட்ட ஜெகன் மோகன் தம்பதியினர் நேற்று காலை கன்னவரம் விமான நிலையம் வந்தடைந்தனர். ஜெகன் மோகனை விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் உள்ள முதல்வர் முகாம் இல்லத்துக்கு சென்றார். அதன் பிறகு வரும் 4ம் தேதி வாக்கு எண்ணும் நாளில் என்ன செய்வது என்பது குறித்து கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.