சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கடந்த மாதம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பிரதானமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோக , முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு, முதன் முதலாக, புதிய அமைச்சர்களான ஆர்.ராமசந்திரன், கோவி செழியன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி , நாசர் ஆகியோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சரவை கூட்டத்தில் இன்று பங்கேற்றுள்ளனர்.