Saturday, June 29, 2024
Home » டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Arun Kumar

சென்னை: சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 95 பேருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சீருடைப் பணியாளர்தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 32,774 பேர். உள்ளாட்சி அமைப்பு, அரசு துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகள் மூலம் 32,709 பேர் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 நபர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 32,709 நபர்களுக்கும் என மொத்தம் 65,483 நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1-க்கான பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.06.2024) தலைமைச் செயலகத்தில், 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, தலைமைச் செயலாளர் அவர்கள், புதிதாக பணி நியமனம் பெற்றவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பணிநியமன ஆணைகள் பெற்றுக் கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் ஜுலை 1-ஆம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (Anna Administrative Staff College) அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் துறை சிவ் தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க. நந்தகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

sixteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi