அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (14.08.2024) முகாம் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சந்தித்து பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி, “தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இம்மாநாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் 11 செயற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனி இணையதளம் தொடங்கப்பட்டு இதுவரை இந்தியாவிலிருந்து 583 நபர்களும், வெளிநாடுகளிலிருந்து 153 நபர்களும் பங்கேற்க பதிவு செய்துள்ளதோடு, 1,003 நபர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் இம்மாநாடு தொடர்பாக 15 ஆய்வுக் கூட்டங்களும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் பழனியில் மாநாட்டு பணிகளை
4 முறை களஆய்வும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 முறை அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இம்மாநாடு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் முத்தாய்ப்பாக அமைவதோடு உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமை அடைய செய்யும் வகையில் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் தவத்திரு திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தவத்திரு பேரூர் ஆதீனம் முனைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபரசுவாமிகள், தவத்திரு மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், திரு.சுகி சிவம், திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார், திருமதி தேசமங்கையர்க்கரசி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related posts

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 3 பேரிடம் விசாரணை தொடங்கியது

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு