அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூசகம்

சென்னை : அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கொளத்தூர் என்பது எனது சொந்த தொகுதி; நினைத்த நேரத்தில் இங்கு வருவேன்,”என்றார். அப்போது அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், “அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கை தான்,”என குறிப்பிட்டார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்றார். மேலும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களை அழைத்து பேசியுள்ளார். 2 நாட்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் நானும் பேச உள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிப்பு

விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கடன் வசூல் மைய தீர்ப்பாயம்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்