சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி தொடரின் தொடக்க விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை சென்னை – 2023” போட்டியானது, ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழ்நாடு அரசின் சார்பில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களிடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, (26.07.2023) அன்று முகாம் அலுவலகத்தில் நேரில் வழங்கினார்.