தமிழக முதல்வர் உளுந்தை கிராமத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ராஜகுளம்,பொன்னேரிகரை ஆகிய இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பாகவுள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இதனையடுத்து, அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிடுகிறார்.
பின்னர், அங்குள்ள அவரது உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதன் பின்னரே விழா மேடைக்கு வந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடக்கி வைக்கிறார். விழாவிற்கு வரும் மகளிருக்கும், பொதுமக்களுக்கும் காலை உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கார்களை நிறுத்த வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் நலத் திட்டங்கள் குறித்த கையேடு ஒன்றும் விழாவிற்கு வரும் அனைத்து மகளிருக்கும் இலவசமாக வழங்கப்படவும் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.