நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்ச 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இதனை ஊக்கப்படுத்த முயலும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது