சிதம்பரம்: சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: இந்தியா முழுவதும் எல்லா மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்துகிற நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டரை பயன்படுத்தினால் தானாகவே இலவச மின்சாரம் அடிபட்டு விடும். மின்சார வாரியத்தை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்மார்ட் மீட்டரை பயன்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு ரூ.12,700 கோடி சம்பள பாக்கி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2,400 கோடி பாக்கி வைத்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.