சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று காலை முதல் வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், மாணவ, மாணவிகள் அதிகளவில் வந்து தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை வெளியூர், வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவில், கோயிலுக்கு வந்திருந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து சென்றனர்.
அதேபோல் கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள், பேருந்துகள், கார், வேன், உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு அதிக அளவு வந்திருந்ததால், கோயிலுக்கு உள்பகுதியிலும், சன்னதியிலும், வெளிப்புறம் மற்றும் கீழவீதி, வடக்கு வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடைவீதிகளிலும், ஓட்டல்களிலும் வியாபாரம் களை கட்டியது.