பூலோக கயிலாயம் என அழைக்கப்படும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டபடியே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேரில் பக்தர்கள், சிவனடியார்கள் சிவவாத்தியம் முழக்கியபடி சென்றனர். பெண்கள் தெருக்களில் கோலமிட்டு வரவேற்றனர். மாணவிகள் பரதநாட்டியம் ஆடி நடராஜர் தேரை வரவேற்றது பரவசத்தை ஏற்படுத்தியது.
தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் வைக்கப்பட்டது. சிதம்பரம் கீழவீதியில் துவங்கி 4 மாட வீதிகளையும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நான்கு வீதிகளையும் தேர் வலம் வந்த பிறகு இரவு நிலைக்கு வரும். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது.நாளை பல்வேறு ஆராதனை, அர்ச்சனைகள் நடைபெற்ற பிறகு மதியம் சுமார் ஒரு மணி அளவில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறும்.
அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆனந்த நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இந்த திருவிழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியுள்ளனர்.