Monday, July 8, 2024
Home » சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தரவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தரவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

by Arun Kumar

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வாக, 3 மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பதவி உயர்வு திட்டத்தின் அடிப்படையில், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என இரட்டை பதவி உயர்வு வழங்குவதற்கு, கடந்த 2018ம் ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்த பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இரட்டை பதவி உயர்வு வழங்காமல், இணை பேராசிரியர் பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து இணை பேராசிரியர்கள் கடந்த 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இணை பேராசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதவி உயர்வு குழு கடந்த 2011 ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பின் கடந்த 2018ம் ஆண்டு தான் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் பல உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்க பெறாமல் பணி ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு மூன்று மாதங்களில் பேராசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi