நேற்று முன்தினம் வெள்ளி மயில், குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கிலும் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடந்தது. பஞ்ச மூர்த்திகளான ஏகாம்பேரஸ்வரர் அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினர். தேரோட்டத்தை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், இரூர், கூத்தனூர், ஆலத்தூர் கேட், பெரகம்பி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ராமச்சந்திரன், கோகிலா ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், ஆலத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, செயல் அலுவலர் ஹேமாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் பாடாலூர் மற்றும் பெரம்பலூர் போலீசார், மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.