சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் சென்னை மண்டலம் சார்ந்த பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ. வேலு

சென்னை : பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலம் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பணிகள், பொதுப்பணித்துறை மற்றும் இதர துறையின் அறிவிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில், தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்களான, “கலைஞர் மாநாட்டு மையம், புதுதில்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டடம், வள்ளூவர் கோட்ட புனரமைப்புப் பணி, சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் யூனிட்டி மால் கட்டடம்“ ஆகிய கட்டடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

தலைமைக் கட்டடக் கலைஞர் அவர்கள், முக்கிய அறிவிப்பு பணிகளுக்கு வரைபடங்களை உடனடியாக தயாரித்து அளித்திட வேண்டும் என்றும், திட்டம் மற்றும் வடிமைப்பு கண்காணிப்புப் பொறியாளர் அனைத்து பணிகளுக்கும் கட்டட வடிவமைப்பு வரைபடம்(Design) குறித்த காலத்தில் பணித்தளத்திற்கு வழங்க வேண்டும். சென்னை கட்டடப் பாராமரிப்பு வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, ஆய்வுக் குறிப்புகளை பதிவு செய்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். சென்னை, இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை போன்று அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் கட்டடப் பணிகள் நடைபெறுவதால், பெரும்பாலான மின் தூக்கிகள் மக்களின் பயன்பாட்டில் இல்லை என்பதால், மின் தூக்கிகள் இயங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுப்பணித்துறையின் தரக்கட்டுப்பாட்டுக் கோட்ட பொறியாளர்கள் அனைத்து கட்டடப் பணிகளையும் அவசியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, குறித்த காலத்தில் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணிகளில் தாமதமின்றி குறித்த காலத்தில் பணிகள் முடிக்க வேண்டும் என்றும், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்தலில் பயன்பாட்டு துறையிடம் குறித்த நேரத்தில் கருத்துரு பெற்று தயாரித்தல் வேண்டும் என்றும், கட்டடம் கட்டுவதற்குமுன் மண் பரிசோதனை செய்து, மண் தன்மைக்கு ஏற்றவாறு கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

கட்டடக் கலைஞர்கள் கட்டட வரைபடங்கள் தயாரிக்கும் போது, கட்டடங்களில் அமைக்கப்படும் கழிவுநீர் குழாய்கள் வெளியேறும் பகுதி, மின் அமைப்புகள் உள்ள பகுதிகளில் கான்கிரிட் போன்ற அமைப்புகள் குறுக்கீடு இல்லாமல் வடிவமைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அமைச்சர், கட்டடங்களில் நீர்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான வாட்டர் ப்ரூப் நடைமுறைகளை அவசியம் பயன்படுத்த வேண்டும். எம்-சான்ட் சுவர் பூச்சு பயன்பாட்டிற்கு தேவையான கெமிக்கல் கலவை பயன்படுத்த வேண்டும். மின் பொறியாளர்கள் அவ்வப்போது மின் அமைப்புகளை ஆய்வு செய்து மின் கசிவு ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!