சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பலமுறை கோரியும், பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டவர்களிடம் வலியுறுத்தியும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக காலம் தாழ்த்தி வந்தது. சமீபத்தில் செப்டம்பர் 27ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தற்போது ஒன்றிய அரசின் 12 சதவிகித பங்களிப்பான ரூ.7425 கோடியை வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், மெட்ரோ ரயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவிகிதத்தை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத் தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இத்தகைய மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடுவிளைவிக்கும். இத்தகைய போக்கை ஒன்றிய பாஜ கூட்டணி அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமேயானால் தமிழக மக்களின் கடும் சீற்றத்திற்கு ஆளாக வேண்டும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.