சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர பிப்.10 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் வரும் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல் படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர். பணிபுரியும் நபர்களுக்கு சீருடை, தொப்பி, காலணி வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையில் வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள் ‘சென்னை பெருநகர ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம் சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15 முகவரிக்கு வரும் 22ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக இலவசமாக பெற்று பூர்த்தி செய்து அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது