சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒன்றிய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.3273 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது திட்ட மதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே. குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கும் ஒன்றிய அரசு தமிழகத்தை மட்டும் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், 2024, 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றால் பணிகள் முடங்கும் ஆபத்து உள்ளதை ஒன்றிய அரசு உணர வேண்டும். டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன், 15 சதவீத பங்கு முதலீடு வழங்கவும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.