சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை: அணி நிர்வாகிகளின் கருத்துகள் கேட்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வரவிருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய திமுக தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில், மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழு ஏற்கனவே இளைஞரணி மாணவரணி, மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளது.

இந்நிலையில் திமுக ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கட்சி நிலவரம் பற்றி கேட்டறியப்பட்டது. அணிகளின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது, வெற்றி வாய்ப்பு நிலவரம் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அணியினரின் கருத்துகளையும் அந்தக் குழு கேட்டறிந்தது. அப்போது நிர்வாகிகள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

Related posts

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி