சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 50க்கும் மேற்பட்ட விமானங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் 365 மென்பொருளை விமான நிறுவனங்கள், வங்கிகள், ஐ.டி. நிறுவனங்கள் பலவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மென்பொருள் நேற்றுமுன்தினம் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இணையதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். உலகெங்கும் விமானநிலையத்தில் கணினிகள் செயலிழந்ததால், விமான நிறுவன ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்களை பயணிகளுக்கு வழங்கினர்.
இந்நிலையில் நேற்று பல நாடுகளில் விமானங்களின் சேவை படிப்படியாக சீரடைந்தது. சென்னை விமான நிலைய பொறியாளர்கள், இணையதள தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக பணியாற்றி சாப்ட்வேர் கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 24 மணி நேரத்துக்கு பின்பு நேற்று காலை 11 மணியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை சீரடைந்தது. இதையடுத்து பயணிகளுக்கு மேனுவல் முறையில் கைகளால் எழுதி வழங்கப்பட்ட போர்டிங் பாஸ்கள், மீண்டும் இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டதால் விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். அதோடு கணினி முறையில் உடனடியாக போர்டிங் பாஸ்கள் கிடைப்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விமான சேவைகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வந்தது. ஆனாலும் நேற்று மாலையில் இருந்துதான் முழுமையான விமான சேவை தொடங்கியது.