சென்னையில் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது: 12 கட்டுப்பாடுகளை விதித்தது சென்னை காவல்துறை; பிற மதத்தினரை புண்படுத்தினால் கைது நடவடிக்கை

சென்னை: சென்னையில் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாது என்பது உள்பட 12 கட்டுப்பாடுகளை விதித்து பெருநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை பெருநகர காவல் எல்லையில் அமைதியான முறையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, இந்து அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கூடுதல் கமிஷனர்களான கண்ணன், நரேந்திரன் நாயர், சுதாகர் தலைமை வகித்தனர். இதில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பா.ஜ, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பெருநகர காவல்துறை 12 கட்டுப்பாடுகளை விதித்து, விநாயகர் சிலைகள் அமைக்க உத்தரவிட்டனர்.

அதன் விவரம் வருமாமறு:
* விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசு துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
* தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
* பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.
* சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள், விளம்பர தட்டிகள் வைக்கக்கூடாது.
* தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்,
* விநாயகர் சிலைகளை கரைக்க காவல் துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு