சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதராக கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் பொறுப்பேற்றார். சென்னையில் துணைத் தூதராக பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் இடமாற்ற முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் மூத்த ஆலோசகராக ஹோட்ஜஸ் பணியாற்றினார். அதற்கு முன்னதாக, அண்டை கிழக்கு விவகாரங்களுக்கான பணியகத்தில் ஒருங்கிணைப்பு உதவி, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரங்களுக்கான துணை உதவி செயலாளராகவும் இருந்தார். ஜெருசலேம் தூதரகத்தின் துணைத் தலைமை அதிகாரியாகவும் பாலஸ்தீன விவகாரப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அமெரிக்க துணைத் தூதராக பொறுப்பேற்ற பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், ‘‘அமெரிக்கா-இந்திய உறவின் அற்புதமான காலத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். நமது வளமான வணிக மற்றும் கல்வி உறவுகள் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பில் நமது இரு நாடுகளும் இணைந்து செய்து வரும் அற்புதமான பணிகள் உட்பட, நமது பரந்த இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான துடிப்பான உணர்வை நமது பணி பிரதிபலிக்கிறது’’ என்றார்.