சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோகம்: லாரி, கார் மீது பைக் மோதி வாலிபர் பலி; நண்பர் படுகாயம்

திருத்தணி: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மற்றும் கார் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும், இறந்தவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லி என்பவரின் மகன் திருமலை(19). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சுனில்(19). இவருவரும் நண்பர்கள். இதில் சுனில் அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதில், நண்பர்கள் இருவரும் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் காஞ்சிப்பாடியில் இருந்து கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மாவூர் ஜங்ஷன் பகுதியில் முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.

இந்நிலையில், நிலைத்தடுமாறி பிரேக் அடித்தபோது லாரி பின் பக்கம் மற்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது பைக் வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பைல் ஓட்டிய திருமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த சுனிலை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலென்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், திருவாலங்காடு காவல் ஆய்வாளர் ராஜகோபால், உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து இறந்த திருமலையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு