முதலில் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீ. ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை சன்சாலா ஹிமாசினி 2 நிமிடம், 10.13 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை லட்சுமி பிரியா (2 நிமிடம், 10.87 விநாடி) வெள்ளி, இலங்கை வீராங்கனை அபிசேகா பிரேம்சிறீ (2 நிமிடம்,10.97 வி.) வெண்கலம் வென்றனர். ஆண்களுக்கான 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் போபண்ணா கிளப்டா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2வது இடம் பிடித்த இந்திய வீரர் வினோத்குமார் வெள்ளிப் பதக்கம், 3வது இடம் பிடித்த இலங்கை வீரர் ஷாவிந்து அவிஷ்கா வெண்கலம் வென்றனர். மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழ் நாடு வீராங்கனை அபிநயா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
முன்னதாக போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். தொடக்க விழாவில் ஆசிய தடகள கூட்டமைப்பு தலைவர் தஹ்லான் ஜூமான் அல் ஹமீத், தெற்கு ஆசிய தடகள கூட்டமைப்பு தலைவர் லலித் பானட், இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் அணில் சுமரிவாலா, தமிழ் நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசு இந்த போட்டிக்காக ரூ.3.67 கோடி நிதியுதவி அளித்துள்ளது.