புழல்: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் மத்திய சிறைச்சாலை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் புழலில் இருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும்போது சாலையில் மின்விளக்குகள் இருந்தும் எரியாததால் சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை நிறுத்துவோர் மீது புழல் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், புழல் மத்திய சிறைச்சாலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இடையூறாக கனரக வாகனங்கள், நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே, சர்வீஸ் சாலையில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவோர் மீது புழல் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.