சென்னை: சென்னை அருகே மருத்துவம் படிக்க பிடிக்காததால் மருத்துவ கல்லூரி டீனின் மகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த மாங்காட்டில் செயல்பட்டு வரும் முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் காசிநாதன் என்பவர் டீனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷைலா. வயது 21. இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இன்று காலை வீட்டு மொட்டை மாடியில் உள்ள தனது அறைக்கு சென்ற ஷைலா, துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஷைலாவின் உடலை மீட்டு விசாரணை செய்தனர். அப்போது ஷைலாவுக்கு மருத்துவம் படிப்பது பிடிக்கவில்லை எனவும், முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த அவர், 2 மாதங்களாக மனஉளைச்சலில் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோரிடம் மருத்துவம் படிக்க விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார். இதன் பின்னரே மாடிக்கு சென்ற ஷைலா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை குறித்து பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.