சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை செல்லும் லூப் சாலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அந்த மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிபதிகள் சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பின்னர், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.