சென்னை: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 52 ஆயிரம் ரூபாயை கடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரமாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 6,500 ஆகவும், சவரன் ரூ.52,000 ஆகவும் இருந்தது. அதன் பிறகு 4ம் முறையாக மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 45 ரூபாய் அதிகரித்து 6545 ரூபாய்க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் அதிகரித்து 52,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.84க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர வைத்து கொண்டுள்ளது.