Saturday, June 29, 2024
Home » சென்னையில் ஜூலை 24ம் தேதி ஜி-20 மாநாட்டின் உறுப்பு நாடுகளின் கூட்டம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னையில் ஜூலை 24ம் தேதி ஜி-20 மாநாட்டின் உறுப்பு நாடுகளின் கூட்டம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

by Suresh

சென்னை: ஜி-20 மாநாட்டின் பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் சென்னையில் 24.7.2023 முதல் 26.7.2023 வரை நடைபெறவுள்ளதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி-20 விளங்கி வருகிறது. அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சனைகளிலும், உலகளாவிய கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வடிவமைப்பதிலும், வலுப்படுத்துவதிலும் ஜி-20 முக்கிய பங்கு வகிக்கிறது. 1.12.2022 முதல் 30.11.2023 வரை நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

இந்தியாவின் தலைமையில் ஜி-20ல் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிக்குழுவின் மூன்று கூட்டங்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நகரங்களில் நடத்திட திட்டமிடப்பட்டு, அவற்றில் இரண்டு கூட்டங்கள் காந்திநகர் மற்றும் மும்பையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது கூட்டம் 24.7.2023 முதல் 26.7.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

ஜி-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் 24.7.2023 முதல் 26.7.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ளதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (5.07.2023) தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அலுவலர்கள் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாட்டில் 24.7.2023 முதல் 26.7.2023 வரை நடைபெறவுள்ள பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட அனைத்து முன்னேற்பாட்டு பணிகளை தொடர்புடைய துறைகள் மேற்கொள்ளுமாறு துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் கமல் கிஷோர், உறுப்பினர், ராஜேந்திர சிங், ஜி-20 மாநாட்டின் இயக்குநர் மிர்நாளினி ஸ்ரீவாஸ்த்தவா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் (தணிப்பு) கலோனல் கீர்த்தி பிரதாப் சிங், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பேரிடர் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ. ராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

11 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi