Sunday, October 6, 2024
Home » சென்னையில் டிச. 9, 10ம் தேதி பார்முலா-4 கார் பந்தயம் உரிய அனுமதியுடன் பாதுகாப்புடன் நடத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னையில் டிச. 9, 10ம் தேதி பார்முலா-4 கார் பந்தயம் உரிய அனுமதியுடன் பாதுகாப்புடன் நடத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

by Karthik Yash

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தேவையான அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பந்தயம் நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதலாவது இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது.

பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்தம் சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ஹரிஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, இந்த கார் பந்தயத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான இடத்தில் நடத்துவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

அந்த சாலையில் அரசு பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன. சுமார் 250 கி.மீ. வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது 50 மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும். இந்த பந்தயத்தை நடத்த எந்த அனுமதியும் பெறவில்லை. ராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய விதிகளில் இடமில்லை. ராணுவ அதிகாரிகளிடமும் அனுமதி பெறவில்லை. இந்த பந்தயம் நடந்தால் போக்குவரத்து அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டு வட சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

அதற்கு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இந்த பந்தயம் ஏற்கனவே நொய்டா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் 2 ஆண்டுகளாக சாலையில் நடத்தப்படுகிறது. இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெற வாய்ப்பு ஏற்படும். மனுதாரர் கூறுவதுபோல் ஒலி மாசு அதிகம் இருக்காது. கார்களின் சத்தத்தை கட்டுப்படுத்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் பந்தயத்தை நடத்த திட்டமிட்டிருப்பதால் சாமான்ய மக்களும் கார் பந்தயத்தை காண வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே, துறைமுகம், ராணுவம், கடற்படை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் உரிய அனுமதிகளை பெற்றே பந்தயம் நடத்தப்படவுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர். இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi