இதனால், சென்னைவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதேபோல நேற்றும் காலை முதல் சென்னை முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் மாலை 4.50 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பகலை இரவாக்கியது. தொடர்ந்து பலத்த காற்றுடன், மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அண்ணாநகர், பெரம்பூர், பாரிமுனை, தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் குளுகுளுவென மாறியது. இவ்வளவு நாள் வெயிலில் சிக்கி தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் திடீரென பெய்த மழையால் தனியார் நிறுவனங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்ற காட்சியை காண முடிந்தது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.