சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் நண்பர்களுடன் பயணித்த 21 வயது இளம்பெண் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் குதூகலமிட்ட நண்பர்கள் அன்றைய மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்தும் ஒருவரை ஒருவர் அன்பால் கேலி செய்தும் மின்சார ரயிலில் திரும்பி கொண்டிருந்த அவர்களுக்கு நேர்ந்த சோகம் அனைவரின் நெஞ்சையும் கலங்கடித்துள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா. 21 வயதான இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு பானிபூரி, சுண்டல், சோளம் போன்ற பண்டங்களை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடற்கரையில் இருந்து கிளம்பிய நண்பர்கள் திருவல்லிக்கேணியில் இருந்து திருவான்மியூருக்கு மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மயிலாப்பூர் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென உடல்நல பாதிக்கப்பட்ட மோனிஷா நிலை குலைந்து கீழே உட்கார்ந்துள்ளார். த
லை சுற்றி தெளிவற்ற நிலையில் இருந்த அவர் தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதை கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நண்பர்களில் ஒருவர் செவிலியராக இருந்ததால் சட்டென்றுஅவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை அளித்திருக்கிறார். உடனே ரயிலில் இருந்து இறங்கிய நண்பர்கள் மோனிஷாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரை அபரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை கேட்டு அதிர்ந்து போயினர்.
இதனிடையே தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் அங்கிருந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்பு பிரேத பரிசோதனை முடிந்த மாணவியின் உடலை அவரின் சொந்த ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் மருத்துவமனை தாக்கல் செய்யும் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இத சம்பவத்தில் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் கடற்கரையில் சாப்பிட்ட உணவுகளா இல்லை மாணவிக்கு வேறு ஏதேனும் பாதிப்புகள் உடலில் இருந்ததா என்பது போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும்.