சோழிங்கநல்லூர்: சென்னை பட்டினம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பதாக, பட்டினம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட மாதவரம், மூலச்சத்திரம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ப்ரீத்தி (23), திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சேர்ந்த பிரியா (28) ஆகிய இரு பெண்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6,030 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், போதை மாத்திரைகளை ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்தது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஏற்கனவே ப்ரீத்தி என்பவர் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் 1 கஞ்சா வழக்கும், பிரியா என்பவர் மீது பொன்னேரி காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும் உள்ளது தெரியவந்தது.