சென்னை மாவட்ட கலெக்டர் தகவல் தேவாலயங்கள் புனரமைப்பு பணிக்கு நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணி மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள் மற்றும் ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், சுற்றுச்சுவர் வசதி போன்ற பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 முதல் 15 வருடம் வரை உள்ள தேவலாயம் கட்டிடத்திற்கான மானியம் 2 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரையுள்ள கட்டிடத்திற்கான மானியம் 4 லட்சத்தில் இருந்து 15 லட்சமாகவும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் 6 லட்சம் மானியத்தில் இருந்து 20 லட்சமாகவும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதியுதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் தலைமையிலான குழு மூலம் பரிசீலித்து கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும், தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்