Sunday, June 30, 2024
Home » சென்னை கே.கே. நகர் சிவன் பூங்காவில் திடீர் மாரடைப்பை தடுக்க புதிய கருவி: காவேரி மருத்துவமனை நிறுவியது

சென்னை கே.கே. நகர் சிவன் பூங்காவில் திடீர் மாரடைப்பை தடுக்க புதிய கருவி: காவேரி மருத்துவமனை நிறுவியது

by Ranjith

சென்னை: காவேரி மருத்துவமனை சார்பில் கே.கே.நகர் சிவன் பூங்காவில், திடீர் மாரடைப்பு ஏற்படும் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டிபிபிரிலேட்டர் சாதனம் நிறுவப்பட்டு உள்ளது. சென்னை வடபழனி காவேரி மருத்துவமனை சார்பில் கே.கே. நகரில் உள்ள சிவன் பூங்காவில் ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டிபிபிரிலேட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது.

ரீஸ்டார்ட் ஹார்ட் பவுண்டேஷனின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியானது அதிகரித்து வரும் திடீர் மாரடைப்புகளை கண்டறிந்து அவற்றை நீக்க முயற்சிப்பது, மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகளைத் தடுப்பது குறித்து சமூகத்திற்கு கற்பிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அத்தகைய அவசர நிலையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறன்களை வழங்குவது போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும். இதனை விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா துவக்கி வைத்தார்.

ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டிபிபிரிலேட்டர் என்ற இந்த கையடக்க சாதனமானது ஒலி பரிமாற்ற முறையில் பயனர் பின்பற்ற வேண்டிய வழிறைகளை ஒன்றன் பின் ஒன்றாக அளிக்கிறது. குறைந்தபட்ச பயிற்சி பெற்றவர்களும் இதைப் பயன்படுத்தலாம், இதனை பயன்படுத்துவதன் மூலம் பொதுஇடத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இதயத் துடிப்பை மீட்டெடுத்து, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரும் வரை ஒருவரின் உடல் நிலையை சீராக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் செயலாக்க இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: திடீர் மாரடைப்பு காரணமாக மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலானவை சரியான நேரத்தில் தலையீடு மற்றும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மரணத்தை தடுக்கலாம். 70% க்கும் அதிகமான மாரடைப்புகள் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தான் நிகழ்கின்றன.

சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் கணிசமாக மேம்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு இது பற்றி பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம். ரீஸ்டார்ட் ஹார்ட் பவுண்டேஷன் மூலம், மண்டங்களில் பல இடங்களில் இந்த கருவியை நிறுவி அடிப்படை உயிர்காக்கும் செயல்முறை மற்றும் முதலுதவி குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

You may also like

Leave a Comment

fourteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi