அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், சிகாகோ நகரில் நேற்று மாலை மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்த காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சகோதரரே! நாம் எப்போது சென்னையில் ஒன்றாக இப்படி சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்?” எனக் கேட்டு பதிவிட்டிருந்திருந்தார்.
ராகுல்காந்தியின் பதிவை பார்த்து, உடனே அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம்! நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.