மேலும் “வடகிழக்கு பருவமழையால் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.அதற்கு தேவையான நீர் இறைக்கும் இயந்திரம், மர அறுப்பான்கள், JCB,படகுகள் போன்ற கருவிகளை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் முன்கூட்டியே சென்று நிறுத்த வேண்டும்.பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும்,”என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன.
இந்தப் படகுகள் மண்டலம் வாரியம் நிறுத்தப்பட்டு, வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு ஒரு படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.