சென்னை: கோடை வெப்பம் தாங்காமல் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதை பயன்படுத்தி, செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோடம்பாக்கம் சொர்ணாம்பிகை தெருவில் சில வீடுகளில், வெப்பம் தாங்காமல் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், மூன்று வீடுகளுக்குள் புகுந்து விலை உயர்ந்த செல்போன்கள், பவர் பேங்க், ஏர் பாட்ஸ் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ், சுரேஷ், சிக்கேந்தர் ஆகிய மூன்று பேர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், கே.கே நகர் பகுதிக்கு உட்பட்ட நடேசன் சாலையில் உள்ள உணவகத்தில், பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.