சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்ட அறிக்கை: 2024 ஜனவரி 1ம் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வரும் 2024 ஜனவரி 5ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்க்கும் பணி நேற்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து குடும்பத்தில் உள்ள வாக்காளர் விவரங்களை சரிபார்ப்பர். கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, இப்பணியை விரைவாக நடத்தி முடிக்க பொது மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.