சென்னை: சென்னையில் பதுங்கி இருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி அன்வர்(30) கைது செய்யப்பட்டுள்ளார். அல்கொய்தா இயக்கங்களுடன் அன்வர் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அன்வர் , அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அயனிங் பணி செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஹபிபுல்லா அளித்த தகவலின் பேரில் அன்வரை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேற்குவங்க மாநிலம் கன்க்சா காவல்நிலையத்தில் தீவிரவாதி ஹபிபுல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்குவங்க மாநில போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அவர் சென்னை கோயம்பேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. மேற்குவங்கத்திலிருந்து விரைந்து வந்த போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அயனிங் பணி செய்து வந்த அன்வரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பில் தீவிரவாதி அன்வர் உறுப்பினராக இருப்பதாகவும் பங்களாதேஷில் மத அடிப்படைவாத இயக்கங்களின் ஆதரவாளராக அன்வர் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு பிரிவில் அன்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.